| ADDED : ஜூலை 06, 2024 08:17 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ஓலப்பாளையத்தில், கோம்பு பள்ளம் ஓடை உள்ளது. 20 அடி அகலம் கொண்ட இந்த ஓடை, வெள்ள நீர் போக்கியாகவும், கிழக்குக்கரை கால்வாய் பாசனத்திற்கும் பெரும் உதவியாக உள்ளது.இந்த ஓடையில் உள்ள பாதை வழியாகத்தான், ஓலப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள், மயானத்திற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த பாதையை அடைத்து தனியார் ஒருவர் வேலி அமைத்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், குமாரபாளையத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில், நேற்று மதியம், 12:00 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வருவாய்துறை அதிகாரிகளை வரவழைத்து, அந்த இடம் அரசு நிலமா? தனியார் நிலமா? என, அளந்து பொதுமக்களிடம் தெரிவிக்க வலியுறுத்தினர்.இதையடுத்து, சர்வேயர் மூலம் நிலத்தை அளக்கும் பணி நடந்தது. மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.