சேந்தமங்கலம் அரசு கலை கல்லுாரியில் கம்பன் விழா
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அரசு கலை கல்லுாரியில், இலக்கிய வட்டம் சார்பில், கம்பன் விழா நடந்தது. தமிழ்துறை தலைவர் கலையரசி முன்னிலை வகித்தார்.நாமக்கல் கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டார். அவர், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''கல்வி கற்பதற்கு ஏழ்மை ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது. பள்ளி, கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் வாசிப்பு பழக்கத்தை ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கம்ப ராமாயணத்தை படித்து அதன் சுவையான கருத்துக்களை தெரிந்துகொள்ள வேண்டும்,'' என்றார். திருவள்ளுவர் பேரவை தலைவர் தமிழ்தேனருவி, கம்பன் கழக பொருளாளர் தில்லை சிவக்குமார், தமிழ் ஆர்வலர் ஹரிகர கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.