| ADDED : மே 29, 2024 07:30 AM
நாமக்கல் : 'நடப்பு கல்வியாண்டிற்கான, இளநிலை பட்டப்படிப்பு சிறப்பு இடஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை இன்று தொடங்குகிறது' என, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு சிறப்பு இட ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை, இன்று காலை, 9:30 மணிக்கு தொடங்குகிறது.சிறப்பு இட ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடக்கிறது. இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவியர், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மகள், ஆதரவற்றோர், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார் தமிழர் முதலானோர், இன்று (மே, 29), காலை, 9:30 மணிக்கு கல்லுாரியில் நடக்கும் மாணவியர் சிறப்பு இட ஒதுக்கீடு சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.முதல் கட்ட பொது கலந்தாய்வு, வரும், 10 முதல், 14 வரை நடக்கிறது. இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்த மாணவிகளுக்கு கல்லுாரியில் இருந்து மொபைல் போன், இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.