நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதத்தை தள்ளுபடியுடன் செலுத்த உத்தரவிட கோரிக்கை
நாமக்கல்:'நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதங்களை, தள்ளுபடியுடன் செலுத்த காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்' என, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின், தமிழக தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 'ஆன்லைன் அபராத நிலுவை தொகையை செலுத்தினால் மட்டுமே, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்த இயலும்' என, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, சென்னை மாநகர போலீசார், புதிய நடைமுறையை கையாள நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த புதிய நடைமுறை, லாரி தொழிலை மேலும் நசுக்கும் செயலாக உள்ளது. ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில், காவல்துறையின் ஆன்லைன் அபராதங்களை, 50 சதவீதம் தள்ளுபடியுடன் செலுத்த வாகன உரிமையாளர்களுக்கு, அம்மாநில அரசு, இரண்டு முறை வாய்ப்பளித்து உத்தரவிட்டிருந்தது. அதேபோல், தமிழகத்திலும் வாகன உரிமையாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஆன்லைன் அபராதங்களை தள்ளுபடியுடன் செலுத்த குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.