தரமற்ற குடிநீர், கலப்பட உணவு பொருட்களின் விற்பனையை ஒழிக்க வேண்டும்:- நுகர்வோர் நீதிபதி
நாமக்கல், டிச. 25-''தரமற்ற குடிநீர், கலப்பட உணவு பொருட்களை சந்தையில் விற்பனை செய்யப்படுவதை ஒழிக்க வேண்டும்,''- என, நாமக்கல்லில் நடந்த தேசிய நுகர்வோர் தின விழாவில், நுகர்வோர் நீதிபதி பேசினார்.நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், நேற்று தேசிய நுகர்வோர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆணைய உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல்லில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட, 2000ம் ஆண்டு நவ., முதல் கடந்த, 2023 மார்ச் வரை, 1,107 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2023 ஏப்., முதல் தற்போது வரை, 21 மாதங்களில், 462 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில், கோவையில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த, 128 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு வழக்கும், 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். விரைவில் நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படுவதோடு, இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, 3 மாதங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த நிதியாண்டில், சமரச பேச்சு வார்த்தை மூலம் தமிழகத்தில் அதிக வழக்குகளை தீர்த்து வைத்து இழப்பீடுகளை, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நுகர்வோர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. மக்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும், நுகர்வோர் வழக்குகளில் விரைவான நீதியை வழங்குவதன் மூலமாகவும் மக்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் மீது நம்பிக்கை அதிகரிக்கும். 100 நுகர்வோர் பாதிக்கப்பட்டால், 5 நுகர்வோர் தான் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். தரமற்ற குடிநீர், கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட நுகர்வோர் கவுன்சில் விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் அய்யாவு, சிவில் வக்கீல் சங்க செயலாளர் ராஜவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.