| ADDED : ஏப் 11, 2024 04:51 AM
குன்னுார் : 'ஓட்டுக்கு காசு வாங்குவதால் நாம் நமது சுயமரியாதையை இழக்கிறோம்,'' என, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.குன்னுாரில் புனித அந்தோணியார் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வாக்காளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிறுவன முதல்வர் ஆனந்த் தலைமை வகித்தார். தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் சுப்ரமணியன், லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர்.லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசுகையில்,''ஜனநாயகத்தின் ஆணி வேர் தேர்தல். வாக்களிக்கும் ஜனநாயக கடமையை அனைவரும் சரியாக நிறைவேற்றாத காரணத்தால், சுதந்திரம் அடைந்த பிறகு முன்னேற்றம் எதிர்பார்த்த அளவில் ஏற்படவில்லை.'50 சதவீத ஓட்டுக்களை பெற்று அமைக்கப்படும் ஆட்சி தான் சிறந்த ஆட்சியாக இருக்கும்,' என்ற அம்பேத்கர் கூற்று இன்று வரை நிறைவேறவில்லை. வெறும் முப்பது சதவீத ஓட்டுக்கள் பெற்றவர்களே ஆட்சி அமைக்கின்றனர். இதற்கு காரணம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் வாக்காளர்களுக்கு புரியவில்லை. ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது எனவே, அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுக்கு காசு வாங்குவதால் நாம் நமது சுயமரியாதையை இழக்கிறோம். எனவே ஓட்டுக்கு பணம் பெறுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, அனைவரும் ஒட்டளிக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர்.