தேயிலை தோட்டங்களில் மலபார் அணில்கள் வனத்துறை கண்காணிப்பு அவசியம்
கூடலுார், ; கூடலுாரில் தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிடும் அரிய வகை மலபார் அணில்களை பாதுகாக்க வனத்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார் வனம் மற்றும் காலநிலை மண்வளம் பல்வேறு தாவரங்கள் வளர்வதற்கு மட்டுமின்றி வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. சிறிய உயிரினங்கள், வனப்பகுதிகளை மட்டுமின்றி, வனத்தை ஒட்டிய தேயிலை, காபி தோட்டங்களை வாழ்விடமாக கொண்டுள்ளது.குறிப்பாக, குரைக்கும் மான், சருகுமான், முயல், அரிய வகை மலபார் அணில்கள் வனத்தை ஒட்டிய குடியிருப்பு, தனியார் மற்றும் சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்களில் அதிக அளவில் முகாமிட்டு வருகிறது.சிலர், இறைச்சிக்காக சுருக்கு கம்பி வைத்து இவைகளை வேட்டையாடி வருகின்றனர். சில நேரங்களில், இவைகளுக்காக வைக்கப்படும் சுருக்கு கம்பியில், புலி, சிறுத்தை போன்றவை சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது. சிலர், மலபார் அணிகளையும் வேட்டையாடி வருகின்றனர். வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வனத்துறையினர், வனப்பகுதி மட்டுமின்றி அதனை ஒட்டிய தனியார் தேயிலை, காபி தோட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சிறிய விலங்குகள் தரைமட்ட கிணறுகளில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தடுக்க, வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பில்லாத தரைமட்ட கிணறுகளுக்கு பாதுகாப்பு தடுப்பு அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.