சாய்ந்த வாழை மரங்கள் போலீஸ் விசாரணை
கூடலுார்:கூடலுார் அருகே காற்றில் சாயாமல் இருக்க கட்டப்பட்ட கயிற்றை மர்ம நபர்கள் வெட்டி சென்றதால், 250 நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டது.கூடலுார் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்தவர் முகமது, 64. இவர் அப்பகுதியில் குத்தகை இடத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார். இரண்டு வாரங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில், நேற்று காலை, வாழை மரங்கள் சாய்ந்து கிடந்தன.தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முகமது, சாய்ந்த மரங்களை ஆய்வு செய்தபோது, வாழை மரங்கள் சாயாமல் இருக்க, ஒன்றோடு ஒன்று இணைத்து கட்டப்பட்ட கயிற்றை மர்ம நபர்கள், வெட்டி சென்றதால், 250 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தது தெரியவந்தது.அவர் கூடலுார் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.முகமது கூறுகையில், 'இரண்டு வாரங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில், வாழை மரங்கள் காற்றில் சாயாமல் இருக்க கட்டப்பட்ட கயிற்றை யாரோ வெட்டி விட்டு சென்றதால், மரங்கள் சாய்ந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்,'என்றார்.