உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண் சரிந்த சாலைகளில் சீரமைப்பு பணிகள் துரிதம் வாகன ஓட்டிகள் நிம்மதி

மண் சரிந்த சாலைகளில் சீரமைப்பு பணிகள் துரிதம் வாகன ஓட்டிகள் நிம்மதி

ஊட்டி;ஊட்டி அருகே மண்சரிவு ஏற்பட்ட மஞ்சனக்கொரை சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணி நடந்தது. நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கன மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மண்சரிவு, சில பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் பெரிய அளவிலான கற்பூர மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. சேதமான சாலைகளை நெடுஞ்சாலை துறையினர் உடனுக்குடன் சீர்படுத்தினர். தீயணைப்பு துறையினர் பெரிய அளவிலான கற்பூர மரங்களை 'பவர்ஷா' உதவியுடன் அறுத்து பொக்லைன் மூலம் அகற்றினர். கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்தாலும் அவ்வப்போது சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குளிரான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில், ஊட்டி புறநகர் பகுதிகளில் மஞ்சனக்கொரை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் தலைமையில், 10க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று பொக்லைன் உதவியுடன் மண்ணை அகற்றினர். பின், மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. வாகனங்கள் இடையூறின்றி செல்ல பொக்லைன் மூலம் சாலை அகலப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், ''மழையால் மண்சரிவு ஏற்பட்ட சாலைகளில் உடனுக்குடன், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் பொக்லைன், தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை