ஊட்டி;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நடந்து முடிந்த, 126 ஆவது மலர் கண்காட்சியில், 10ம் தேதி முதல், 25 வரை, 2.30 லட்சம் பயணிகள் பூங்காவுக்கு வருகை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தாலும், பூங்கா நிர்வாகம் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தவறி உள்ளது. பூங்காவில், ஆண் மற்றும் பெண்களுக்காக தனித்தனியே கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அங்கு தண்ணீர் குழாய்கள் உடைந்து போதிய அளவில் தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது.இதனால், சுற்றுலா பயணிகள் குறிப்பாக, பெண்கள் கழிவறையின் வெளியில் உள்ள தொட்டியில் இருந்து, தண்ணீர் எடுத்து செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது. மேலும், இங்குள்ள நடைபாதைகளும் சீரமைக்காததால், சிறுவர்கள், முதியவர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'மலர் கண்காட்சியின் போது, பூங்கா நுழைவு கட்டணம், 150 ரூபாய், 75 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பூங்கா அழகை ரசிக்க பயணிகள் வருகின்றனர். ஆனால், இயற்கை உபாதையை கழிக்க கழிவறைகளில் போதிய வசதிகள் இல்லை. துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை வெளியில் இருந்து தொட்டிகளில் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் சிரமங்களை சந்திக்கின்றனர். இதற்கான சீரமைப்பு பணிகளை பூங்கா நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.