| ADDED : ஜூலை 10, 2024 02:05 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே மொபைல் போனை துாக்கி மரத்தின் மீது ஏறி செல்லும் குரங்கால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பந்தலுார் அருகே சேரம்பாடி, சப்பன்தோடு பகுதியை சேர்ந்த சாஜிதா என்பவரின் வீட்டிற்கு வந்த குரங்கு, வீட்டு திண்ணையில் வைத்திருந்த அவரது மொபைல் போனை துாக்கி சென்றுள்ளது. இதனை அறியாத குடும்பத்தினர், போனை யாரோ திருடி சென்றதாக நினைத்து, பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மொபைல் அவரது தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவரது வீட்டிற்கு வந்த குரங்கு, வீட்டு வராண்டாவில், சாஜிதாவின் உறவினர் வைத்திருந்த மொபைலை பறித்து கொண்டு ஓடியது. வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டு குரங்கிடம் இருந்து மொபைலை பிடுங்க முயன்ற நிலையில், குரங்கு மரத்தின் உச்சிக்கு சென்று விளையாட்டு காட்டியது. சில மணி நேரம் மொபைலை வைத்து விளையாட்டு காட்டிய குரங்கு, திடீரென கை தவறி கீழே விட்டு விட்டது. உடனடியாக ஓடி சென்று மொபைலை மீட்டு வந்தனர். மொபைலை அபேஸ் செய்யும் குரங்கால் அப்பகுதி மக்கள் வெளி பகுதியில் போனில் பேச அச்சப்படும் சூழல் தொடர்கிறது.மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் உலா வரும் இந்த குரங்கை வனத்துறையினர் பிடித்து, வேறு பகுதியில் விடவேண்டும்,' என்றனர்.