உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எமரால்டு, போர்த்தி மந்து அணைகளிலிருந்து இதுவரை 100 அடி தண்ணீர் வெளியேற்றம்!

எமரால்டு, போர்த்தி மந்து அணைகளிலிருந்து இதுவரை 100 அடி தண்ணீர் வெளியேற்றம்!

ஊட்டி: 'குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக இரு அணைகளிலிருந்து இது வரை,100 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது; அடுத்த மாதம் இறுதி வரை இப்பணிகள் நடக்கும்,' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி அருகே காட்டு குப்பையில்,1,850 கோடி ரூபாய் மதிப்பில், குந்தா நீரேற்று மின் திட்டம், 4 பிரிவுகளாக நடக்கிறது. அதில், ஒரு பிரிவில், 125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் உற்பத்திக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.முதல் பிரிவுக்கான இப்பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து, கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் மின் உற்பத்தி பணி கடந்த, 2022 டிச .,மாதம் நிறைவடைந்து உற்பத்தி துவக்கி இருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

உயரதிகாரிகள் ஆய்வு

மின் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி, குந்தா நீரேற்று மின் திட்டம் பணிகள் நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு அணை, நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் முழு கொள்ளளவில் இருந்ததால் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வினாடிக்கு, 1000 கன அடி நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த நவ.,10ம் தேதி முதல் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. எமரால்டு அணையின் மொத்த அடியான, 184 அடியில் 165 அடி வரை தண்ணீர் இருப்பில் இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட, 80 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

போர்த்தி மந்தில், 80 அடி வெளியேற்ற திட்டம்

இந்நிலையில்,போர்த்தி மந்து அணையிலிருந்து குறிப்பிட்ட அளவில் தண்ணீர் வெளியேற்றினால் தான் பணிகளை முழுமைப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக போர்த்திமந்து அணையிலிருந்து காட்டு குப்பை வழியாக எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் வெளியேற்றும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. போர்த்தி மந்து அணை,130 அடி கொண்டதாகும். அங்கு,105 அடி வரை தண்ணீர் இருப்பில் உள்ளது. அதிலிருந்து, 80 அடி வரை தண்ணீர் வினாடிக்கு, 600 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக எமரால்டு அணையிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட, 80 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரண்டாம் கட்டமாக போர்த்தி மந்து அணையில், 80 அடி வரை தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து வினாடிக்கு, 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இது வரை போர்த்தி மந்தில், 20 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பிப் ., மாதம் இறுதி வரை மேலும், 60 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை