மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்;கூடலுார் தேவர்சோலை சிவன் கோவிலுக்கு, வன விலங்குகள் நல பெண் ஆர்வலர், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ரோபோடிக்' யானை பொம்மையை வழங்கினார்.கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சங்கீதா ஐயர். இந்தியா வம்சாவளியான இவர் தற்போது, கனடாவில் வசித்து வருகிறார். விலங்குகள் நல ஆர்வலரான இவர், ஆசியா யானைகளை பாதுகாக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.அதன் முயற்சியாக, நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவர்சோலை சிவன் கோவிலுக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ரோபோடிக்' யானை பொம்மையை தானமாக வழங்கினார்.இதற்கான நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கோவில் கமிட்டி செயலாளர் ரங்கசாமி வரவேற்றார். கமிட்டி தலைவர் பாலகோபால் தலைமை வகித்தார். விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா ஐயர் பங்கேற்று, ரோபோடிக் யானை பொம்மையை கமிட்டியிடம் ஒப்படைத்தார். கோவிலுக்கு வழங்கப்பட்ட ரோபோடிக் யானை பொம்மை நகர்ந்து செல்லும் வகையில் கால்களில் சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கண் சிமிட்டுவது உடன், தும்பிக்கை மூலம் தீர்த்தம் தெளிப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சங்கீதா ஐயர் கூறுகையில், ''பல கோவில்களில் யானைகளை சங்கிலியில் கட்டி துன்புறுத்துகின்றனர். அதனை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். யானைகள் கோவில்களில் வாழக்கூடியவை இல்லை. அவை வனத்தில் வாழக்கூடியவை. கேரளாவில் கோவில் யானைகள் அதிகம் உயிரிழக்கின்றது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழக அரசும், நீதித்துறையும் யானையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இதனால், இங்கு துன்புறுத்துவது அதிகம் இல்லை. யானைகள் துன்புறுத்துவதை தடுக்கவே, கோவில்களில் ரோபோட்டிக் யானை பொம்மை பயன்படுத்தும் போது, நம்முடைய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்படும்,''என்றார்.நிகழ்ச்சியில், கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன், தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, கோவில் கமிட்டி பொருளாளர் சதீஷ்குமார், வியாபாரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Oct-2025