உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகராட்சி மார்க்கெட் கடைகள் இடிப்பு விவகாரம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நகராட்சி மார்க்கெட் கடைகள் இடிப்பு விவகாரம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

குன்னுார் : குன்னுார் மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரத்தில், தி.மு.க., -அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.குன்னுார் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுசீலா தலைமையில், கமிஷனர் இளம்பரிதி முன்னிலையில் நடந்தது. கவுன்சிலர் சரவணகுமார் பேசுகையில், ''மார்க்கெட் கடைகள் இடிக்கும் நிலையில், 19 கடைகள் ஏலம் விடுவது குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும், கடைகளை இடித்தால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதே வியாபாரிகளுக்கு மீண்டும் கடைகள் வழங்க உத்தரவாதம் வழங்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, 'இந்த விஷயத்தில், பொய் வாக்குறுதிகள் அளித்து இரட்டை முகமாக தி.மு.க., வியாபாரிகளை ஏமாற்றியதாவது,' என, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.அப்போது, பேசிய துணை தலைவர் வாசிம் ராஜா,''மார்க்கெட் வாடகை உயர்த்தியது அ.தி.மு.க., தான்,'' என்றார். இதனால், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, கவுன்சிலர் குருமூர்த்தி பேசுகையில், ''தி.மு.க.,வின் வாய்ஸ் அதிகரிக்க துணை தலைவர் மாற்று மைக் வாங்கி அதிக சப்தத்தில் பேசுகிறார். அ.தி.மு.க.,வினரின் மைக்குகள் உரிய முறையில் வேலை செய்யாமல் தடுக்கப்படுகிறது,'' என்றார்.இதை தொடர்ந்து, 'குன்னுார் மார்க்கெட் வியாபாரிகளை வஞ்சிக்கும் விதமாக, ஒரு தலைபட்சமாக நடக்கும் தி.மு.க., நகர மன்றத்தை கண்டிக்கிறோம்,' என, கூறி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சரவணகுமார், குருமூர்த்தி, ராஜ்குமார், உமாராணி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.''நகர மன்றத்தில் பேசாமல், கோழை முகம் காண்பித்து, அ.தி.மு.க.,வினர் வெளியேறினர்,'' என, துணை தலைவர் வாசிம் ராஜா தெரிவித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிக மாற்று இடம்; கமிஷனர் விளக்கம்

மார்க்கெட் கடை விவகாரத்தை முழுமையாக தெரிவிக்க, கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்த போது, கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு அரசின் நிதி, 21 கோடி ரூபாய்; நகராட்சி நிதியில், 20.50 கோடி ரூபாய் என, மொத்தம், 41.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. கடைகள் இடிப்பதற்கு, 1.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடை வாடகை, 5 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. நிலுவை முழுமையாக செலுத்தும் வியாபாரிகளுக்கு, ஆதார், பான் கார்டு, ஜி.எஸ்.டி., எண் உள்ளிட்டவை பெற்று, 'பயோ கார்டு' வழங்கப்படும். தற்போது, வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால், 'மீண்டும் உயர்த்தப்படாது,' என, வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலைய இடம், இந்து அறநிலையத்துறை இடம், உழவர் சந்தை அருகே உள்ள இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ