இருதயவியல் துறையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1,800 வெளி நோயாளிகள்! ஆரோக்கியத்திற்கு உணவு, சீரான உடற்பயிற்சி அவசியம்
ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருதயவியல் துறையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு, சராசரியாக, 1,800 வெளி நோயாளிகள் மற்றும் 80 முதல் 100 உள் நோயாளிகள் சிகிச்சை பெற்றுசெல்கின்றனர்.ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட தாலுக்காவிலிருந்து தினசரி சராசரியாக, 1,200 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.இங்குள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தவிர, மருத்துவ கல்லுாரியில் படித்து வரும் மருத்துவர்களுக்கு படிப்பு சார்ந்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மாதம் 1,800 பேருக்கு சிகிச்சை
நம் நாட்டில் இருதய நோய் பாதிப்பால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பதாக, மருத்துவ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஐந்தில் ஒன்று இருதய நோயினால் ஏற்படுகின்றது. மலை மாவட்டத்தில், இதை தடுக்கும் வகையில், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருதய நோய் பாதிப்பால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனி கவனம் செலுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இருதயவியல் துறையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு, 1000 முதல் 1,800 வெளிநோயாளிகள் மற்றும் 80 முதல் 100 உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு மாதத்திற்கு, 30 முதல் 40 நபர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தவிர, 800 முதல் 1000 'எக்கோ கார்டியோகிராபி' பரிசோதனை செய்யப்படுகின்றன.அதில், 150 முதல் 200 பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு கண்டறிவதற்கும் சிறப்பு 'எக்கோ' பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, 'இருதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சி அவசியம்,' என, மருத்துவ துறைஅறிவுறுத்தி உள்ளது.
என்னென்ன மருத்துவ பிரிவு...!
அரசு மருத்துவ கல்லுாரி இருப்பிட மருத்துவர் டாக்டர் ரவிசங்கர் கூறுகையில், ''ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை,பொது மருத்துவம், டயாலிசிஸ், இருதயவியல், எலும்பியல், குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், காது, பல், மயக்க மருந்து, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், கதிரியக்கவியல், நோயியல், ரத்த வங்கி, நுண்ணுயிரியல், ஆர்.டி.பி.சி.ஆர்., உயிர் வேதியியல், பிசியோதெரபி ஆகிய மருத்துவ பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையான சிகிச்சைகளை இங்கு பெறலாம்,'' என்றார்.