மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா துவக்கம்
கூடலுார்: மசினகுடி, மசினி அம்மன் கோவிலில் துவங்கிய தசரா திருவிழா வரும், 1ம் தேதி வரை நடக்கிறது. முதுமலை, மசினகுடியில் அமைந்துள்ள மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா, நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மாலை, மாயார் கிராமத்திலிருந்து ஸ்ரீ சிக்கம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீசிக்கம்மன், தொட்டம்மன், தண்டு மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, 28ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 29ம் தேதி காலை, 8:30 மணிக்கு சொக்கநள்ளி மாதேஸ்வரன் கோவிலில் இருந்து கத்தி எடுத்தல் வரும் நிகழ்ச்சி, இரவு, 7:00 மணிக்கு தசரா தேர் திருவிழா ஊர்வலம் நடக்கிறது. 30ம் தேதி சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து மாலை முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடக்கிறது. அக்., 1ம் தேதி ஸ்ரீசிக்கமனை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் மசினகுடி ஊர் மக்கள் செய்துள்ளனர்.