குன்னுார்: குன்னுார், கோத்தகிரியில், நேற்று கடும் மேகமூட்டம் நிலவியதால், வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. குன்னுார் பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக, 'வெயில், மேகமூட்டம், சாரல் மழை,' என, அவ்வப்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு அடர்த்தியான மேகமூட்டம் நிலவியதால், ஹெட்லைட், மிஸ்ட் லைட் பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்பட்டன. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வந்து சென்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தாலும், குன்னூர் ரயில் நிலையத்தில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர். இதேபோல, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடும் குளிர் நிலவியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை, பெரிதும் பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. சுற்றுலா வாகனங்கள் உட்பட, அனைத்து வாகனங்களும், முகப்பு விளக்கு உதவியுடன், சிரமத்திற்கு இடையே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவன (நெஸ்ட்) தலைவர் சிவதாஸ் கூறுகையில், ''குன்னுார், கோத்தகிரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்வதால் நீர்வளம் வனவளம் அதிகரிக்கிறது. தற்போது பனி விழும் நேரத்தில் இந்த மழையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.