மேலும் செய்திகள்
ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்
14-Jan-2025
குன்னுார்; குன்னுார் ஜெகதளா காரக்கொரையில், கன்னி ஹெத்தையம்மனை வழிபடும் வகையில், விரதம் மேற்கொண்டவர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, எப்பநாடு, கேத்தி, பந்துமை ஆகிய, 14 கிராமங்களில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில் நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம் துவங்கியது.ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ்பிக்கட்டி ஆகிய, 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டவர்கள், கொதுமுடி கிராமம் வரை நடை பயணம் சென்று அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து ஜெகதளா வந்தடைந்தனர்.நேற்று காரைக்கொரை மடிமனையில் நடந்த குண்டம் திருவிழாவில், சிறப்பு பூஜைகள் நடத்தி, பூசாரி மற்றும் 9 ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கியவர்களின் காலில் விழுந்து, மக்கள் ஆசி பெற்றனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை நடந்தன. பல்லாயிரகணக்கான படுக மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.இதேபோல, காத்து குளி மடிமனையில் விழா நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலாச்சார உடையணிந்து, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். விழாவில், அம்மன் அருள்வாக்கு மற்றும் அன்னதானம் இடம்பெற்றது. வரும், 20ம் தேதி 'மடியறை' என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆறு ஊர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
ஜெகதளா காரக்கொரை குண்டம் திருவிழாவுக்காக மாவட்டம் மட்டுமின்றி கோவை உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். திடீரென அருவங்காட்டியிலிருந்து, காரக்கொரை வரை வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால், கிராம மக்கள் சார்பில், 20 பேர் செல்லும் சிறு வேன்கள் இயக்கப்பட்டதில், 60க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சென்றனர். முதியவர்கள் மற்றும் கை குழந்தைகளுடன் பெண்கள் நடந்தே மிகவும் சிரமத்துடன் சென்று வந்தனர். இதேபோல, அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்புகள் உட்பட இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
14-Jan-2025