உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மதிப்பெண் சான்றிதழ் 90 நாளில் பெற தவறினால் அழிக்கப்படும்

 மதிப்பெண் சான்றிதழ் 90 நாளில் பெற தவறினால் அழிக்கப்படும்

ஊட்டி: நீலகிரி மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சதீஷ்குமார் (பொ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தனித்தேர்வு மையங்களில், மார்ச், 2023 முதல், ஜூன், ஜூலை வரை நடந்த, 10ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளை எழுதிய தனி தேர்வர்கள், இதுவரை சான்றிதழ்கள் பெறவில்லை என்றால், 90 நாட்களுக்குள், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பருவ தேர்வுக்கான சான்றிதழ்கள், தற்போது, மாவட்ட அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ளன. முன்னதாக, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அந்தந்த தேர்வு மையங்கள் வழியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால், சில தனித்தேர்வர்கள் நேரில் பெற்று கொள்ளாததால், அவர்களின் சான்றிதழ்கள் இன்னும் அலுவலகத்தில் உள்ளன. இதனுடன், எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இணைத்த அசல் மாற்று சான்றிதழ்களும் உள்ளன. தனித்தேர்வர்கள் நேரில் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இல்லாத பட்சத்தில், 45 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம்ப் ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன், தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் மற்றும் தேர்வுக் கூட அனுமதி சீட்டின் நகலை இணைத்து அனுப்பி, அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட, 90 நாட்களுக்குள் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வு துறை விதிமுறைகளின் படி அழிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை