உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கியதால்  அதிகரிப்பு! தேயிலை தூள் விற்பனை, விலை யில் ஏற்றம்

வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கியதால்  அதிகரிப்பு! தேயிலை தூள் விற்பனை, விலை யில் ஏற்றம்

குன்னூர்: வட மாநிலங்களில், குளிர் காலம் துவங்கிய நிலையில், டீ நுகர்வு அதிகரித்து வருவதால், நீலகிரி உட்பட தென்மாநில தேயிலை தூள் விற்பனை மற்றும் விலை உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், லட்சக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு கிலோ தேயிலை தூள் உற்பத்திக்கு, 4 கிலோ பசுந்தேயிலையை, விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். இங்கு உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் ஏல மையம் மற்றும் டீசர்வ் மையம், கோவை, கொச்சின் ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது. குன்னூர் தேயிலை ஏல மையத்தில், கடந்த, 20, 21 தேதிகளில், இந்த ஆண்டின், 47வது ஏலம் நடந்தது. 20.41 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 19.23 லட்சம் கிலோ என, 94.22 சதவீதம் விற்றது. கடந்த ஏலத்தை விட, 1.79 லட்சம் கிலோ வரத்து உயர்ந்ததுடன், 1.72 லட்சம் கிலோ கூடுதலாகவும் விற்றது.

விற்பனையில் ஏற்றம்

மாத துவக்கத்தில், 102.38 என இருந்த சராசரி விலை, ஏற்றம் கண்டு, இந்த ஏலத்தில் 111.70 ரூபாய் என உயர்ந்தது. இலை ரகத்தில் அதிகபட்சமாக 120.81 ரூபாய், டஸ்ட் ரகத்தில் 116.39 ரூபாய் என இருந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில், 128 ரூபாய் என இருந்த சராசரி விலை, ஜூன் மாதத்தில் இருந்து சரிய துவங்கி, 100 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இந்த மாதம் ஏற்றம் காண துவங்கியுள்ளது. இதே போல, டீசர்வ் ஏலத்திலும் கடந்த 5 மாதங்களாக கிலோ 80 முதல் 99 க்கும் குறைவாக இருந்தது. இந்த முறை ஏலத்தில் 102.73 கிடைத்ததால் வரும் ஏலங்களிலும் ஏற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வர்த்தகர்கள் கூறுகையில், ''ஆண்டுதோறும் நவ., டிச., மாதங்களில் வட மாநிலங்களில், குளிர் அதிகமாக உள்ளதால் டீ நுகர்வு அதிகம் இருக்கும். தேவை அதிகரிப்பதால் விலையில் ஏற்றும் கண்டு வருகிறது, தற்போது, வெயில் மற்றும் மழையின் காரணமாக பசுந்தேயிலை மகசூல் அதிகரிக்கிறது. கடந்த மாதத்திற்கான பசுந்தேயிலை விலை கிலோவிற்கு, 15.60 ரூபாய் என, தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது. தற்போது தேயிலை தூளுக்கு விலை அதிகரித்து வருவதால், இந்த மாத பசுந்தேயிலை விலையும் அதிகரிக்கும்.

விவசாயிகள் மும்முரம்!

சமீபத்தில் பரவலாக மழை பெய்ததால் தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம், வெயில் தென்பட்டதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. மூன்று ஷிப்ட் அடிப்படையில் தேயிலை துாள் உற்பத்தியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டிச., இரண்டாவது வாரத்தில் உறைப்பனி தென்பட வாய்ப்பிருப்பதால் அறுவடைக்கு தயாரான இலைகளை சிறு விவசாயிகள் அறுவடை செய்து தொழிற்சாலைக்கு வினியோகிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை