ஆதி திராவிடர்களுக்கு நில பட்டா வழங்கப்படும்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் தகவல்
கூடலுார்: கூடலுாரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாமில், பயனாளிகளுக்கு, 3.14 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூடலுார், நாடார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற, நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில், ''அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெற்றால், தமிழகம் வளர்ச்சி பெற முடியும் என்ற நோக்கில், முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டான்டீ தொழிலாளர்களின், கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு போன்று போனஸ் கிடைக்க முதல்வரிடம் பேசி தீர்வு காணப்படும். வரும் மாதத்தில் கூடலுாரில், 3,000 அல்லது 5,000 ஆதிதிராவிடர்களுக்கு நிலப்பட்ட வழங்கப்படும். தொடர்ந்து, ஊட்டி, குன்னுார் கோத்தகிரி பகுதிகளில், 10 ஆயிரம் போருக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,''என்றார். தொடந்து, 181 பயனாளிகளுக்கு, 3.14 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய முழு நேர ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நீலகிரி எஸ்.பி., நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.