| ADDED : ஜன 24, 2024 11:51 PM
கோத்தகிரி : 'குழந்தைகளின் மூளைக்கு தேவையான ஊட்டசத்து குறைந்தால் கல்வியில் பின்தங்கும் அபாயம் ஏற்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், லயன்ஸ் கிளப் மற்றும் கே.எம்.எப்., மருத்துவமனை சார்பில், போதை ஒழிப்பு கருத்தரங்கு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.லயன்ஸ் கிளப் தலைவர் மோகன் குமார் தலைமை வகித்தார். அதில், கண், எலும்பு, நீரிழிவு மற்றும் பொது மருத்துவம் என, ஆறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று, சிகிச்சை அளித்தனர். மாணவர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.நிகழ்ச்சியில், அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஒய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய சிறுதானிய உணவு பழக்கத்தை தவிர்த்து, வெறும் ரேஷன் அரிசி உட் கொள்வதால், ஊட்டச்சத்து குறைந்தவர்களாக மாறியுள்ளனர்.குழந்தைகள் உண்ணும் உணவில், 25 சதவீதம் மூளை வளர்ச்சிக்கு மட்டும் தேவைப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் பின்தங்கி இருப்பதற்கு அவர்களது மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்காதது முக்கிய காரணம்.ஆண்களிடம் பரவலாக குடிப்பழக்கம் இருப்பதால், குழந்தைகளின் வாழ்க்கை சீரழிகிறது. கட்டுக்கடங்காத குடிப்பழக்கம் ஒரு நோய் என மருத்துவ ஆய்வு கூறுகிறது. மதுவில் உள்ள வேதி பொருள்கள் மூளை செல்களை அரித்து சேதப்படுத்துகிறது.இந்த குறைப்பாடு, அடுத்த பரம்பரையினரையும் பாதிக்கிறது. ஒருவரின் குடிப்பழக்கம் அவரை சுற்றியுள்ள, 200 பேர்களை மன நோயாளியாக மாற்றுகிறது. இவ்வாறு, ராஜூ பேசினார்.லயன்ஸ் கிளப் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் நன்றி கூறினார்.