உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடன் திரும்ப செலுத்தும் விகிதம் குறைய வாய்ப்பு

கடன் திரும்ப செலுத்தும் விகிதம் குறைய வாய்ப்பு

ஊட்டி : 'மத்திய ரிசர்வ் வங்கி வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால் கடன் திரும்ப செலுத்தும் விகிதம் குறைய வாய்ப்புள்ளது,' என ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளர் தெரிவித்தார். ஊட்டி ஸ்டேட் வங்கியில் 145வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளர் சந்திரசேகரன் நேற்று ஊட்டி வந்தார்.விழாவுக்கு பின், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;ஸ்டேட் வங்கியின் சென்னை கோட்டத்தின் கீழ், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் வருகின்றன. சென்னை கோட்டத்தில் வர்த்தகம் வைப்பு தொகை 50 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், கடன் 72 ஆயிரம் கோடி ரூபாயுமாக உள்ளது. சந்தை மதிப்பில் வைப்பு தொகை 26 சதவீதமும், கடன் மதிப்பு 16 சதவீதமும் உள்ளது. வரும் 2014ம் ஆண்டு வைப்பு தொகை மதிப்பு 30 சதவீதமாகவும், கடன் மதிப்பு 20 சதவீதமாகவும் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண வீக்கத்தை கட்டுபடுத்த மத்திய ரிசர்வ் வங்கி வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் கடன் தொகை திரும்ப செலுத்துவது குறைய வாய்ப்புள்ளது. வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்தாது என நம்புகிறோம். வட்டி விகிதங்கள் உயர்த்தப்படாவிட்டால் கடன் திரும்ப செலுத்தும் விகிதம் உயரும். வங்கி சேவை மட்டுமின்றி ஸ்டேட் வங்கி சமூகம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 16 ஆயிரம் பள்ளிகளுக்கு மின் விசிறி வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லாபத்தில் ஒரு பகுதி சமூக சேவைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக எரிசக்தியை சேமிக்க காகிதமில்லா கவுன்டர்கள் அறிமுகமாகின. சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள் நிறுவப்பட்டு வருகின்றன. வங்கி நவீனப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முழுமையாக இயந்திரமயமாக்காமல், வங்கி சேவைக்கு ஆட்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 25 ஆயிரம் புதிய ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை