உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / "மக்கள் தொகை பெருக்கத்தால் சுரண்டப்படும் இயற்கை

"மக்கள் தொகை பெருக்கத்தால் சுரண்டப்படும் இயற்கை

குன்னூர் : 'மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப நிலப்பரப்பு இல்லாததால், இயற்கை சுரண்டப்படுகிறது,' என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.இந்திய குடும்ப நலச்சங்கத்தின் சார்பில் உலக மக்கள் தொகை நாள் எடப்பள்ளி கிராமத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சர்வதேச நிர்வாக இயல் ஆலோசகர் சுந்தர் பேசியதாவது:இந்தாண்டு அக்டோபர் 31ம் தேதி, உலகின் 700வது கோடி குழந்தை பிறக்கவுள்ளது என, ஐ.நா., சபை கணக்கிட்டுள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் 3,500 கோடி ரூபாய் மக்கள் தொகை கட்டுப்பாட்டு விழிப்புணர்வுக்காக செலவிடப்படுகிறது. இருப்பினும், மக்கள் தொகை 2021ல் 800 கோடி, 2030ல் 900 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள் வாழும் நிலப்பரப்பு அதே அளவில் இருக்கும் நிலையில், கூடுதலாக 200 கோடி மக்களுக்கு அடுத்த 19 ஆண்டுகளில் இடம் கொடுப்பது கடினம்.

இதனால் தான் காடு, விளை நிலங்கள், நீராதாரங்கள் அழிக்கப் பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்பட்டு, இயற்கை சீரழிக்கப்படுகிறது.2011ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, நீலகிரியில் 7 கோடியே 35 லட்சத்து 071 பேர் வாழ்கின்றனர்; அவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 60 ஆயிரத்து 170 பேர்; பெண்கள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 901 பேர். மாவட்ட மக்களில் பலர் வெளியூருக்கு வேலைத் தேடி இடம் பெயர்ந்ததால், மக்கள் தொகை 2001ம் ஆண்டை விட 3.55 சதவீதம் குறைந்துள்ளது. நீலகிரியில் 90 ஆயிரம் பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள தகுதியுடன் இருந்தும், ஆண்டுக்கு 1,500க்கும் குறைவானவர்கள் மட்டுமே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

நீலகிரியில் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு குழந்தை என, ஆண்டிற்கு 5,200 குழந்தைகள் பிறக்கின்றன. மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப நிலப்பரப்பு அதிகரிக்காததால், காடு, விளைநிலம், நீராதாரங்கள் அழிக்கப்பட்டு வீடு, பள்ளி, கல்லூரி, சந்தை, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு என அனைத்தும் சவா லாக மாறியுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையை மகத்தான சக்தியாக பயன்படுத்தி சவால்களை எதிர்கொள்வதற்குரிய திட்டங்களை வகுத்தால், நாடு பல துறைகளிலும் வளர்ச்சி பெறும். இவ்வாறு, சுந்தர் பேசினார்.சங்க துணைத் தலைவர் பிரேமானந்த் வரவேற்றார். மருத்துவ அதிகாரி சீனிவாசன் போத்தி தலைமை வகித்தார். கட்டுரை, வாக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. சங்க மேலாளர் (பொ) சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ