கூடலுாரில் சேதமடைந்த பாலம்; சீரமைக்க நடவடிக்கை இல்லை
கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட், மைசூரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஏழுமுறம் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை, இக்கிராம மக்கள் மட்டுமின்றி, அவசர தேவைக்கு சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த, 2023ல் பருவமழையின் போது, நீரோடையில் ஏற்பட்ட வெள்ளத்தில், இச்சாலை குறுக்கே உள்ள பாலத்தை ஒட்டி மண்ணரிப்பு ஏற்பட்டு பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் மண் மூட்டைகள் அடுக்கி, சிறிய வாகனங்கள் மட்டும் அனுமதித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக பாலத்தை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், பாலம் மேலும், சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கவுன்சிலர் சத்தியசீலன் கூறுகையில்,''சேதமடைந்த பலத்திற்கு மாற்றாக புதிய பாலம் அமைக்க, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இம்மாத மன்ற கூட்டத்திலும் இது குறித்து பேசினேன். புதிய பாலம்அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேதமடைந்த பலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்க அனைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்,''என்றார்.