உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்த பஜார் நடைபாதை மக்கள் நடந்து செல்ல தடை

சேதமடைந்த பஜார் நடைபாதை மக்கள் நடந்து செல்ல தடை

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பஜார் - குன்னுார் பஸ் நிறுத்தம் இடையே, நடைப்பாதை சேதமடைந்துள்ளதால், மக்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.நடுஹட்டி, கக்குச்சி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையாக கட்டபெட்டு பஜார் பகுதி அமைந்துள்ளது. இங்கு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், தனியார் கிளினிக்குகள், வி.ஏ.ஓ.,அலுவலகம் மற்றும் 'இன்கோ' தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. தவிர, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. கட்டபெட்டு பஜாருக்கு வரும் மக்கள், குன்னுார் பஸ் நிறுத்தம் வழியாக, கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட, 500 மீட்டர் நடைபாதை மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. மழைநீர் கால்வாய் அடைப்பட்டு, தண்ணீர் நடைபாதையில் ஓடுவதால், கான்கிரீட் பெயர்ந்து பல இடங்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், நடந்து செல்வோர், காயம் அடைந்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த நடைபாதையை, விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை