உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மக்கள் போராட்டம்

சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மக்கள் போராட்டம்

கோத்தகிரி: கோத்தகிரி கேசலாடா பகுதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்தில் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி கேசலாடா கிராமத்தில், 120க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில், சிறிய கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தற்போது, கட்டடத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேடான பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இங்குள்ள சமுதாய கூடத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட கூடும் என கூறி, இந்த கட்டடத்தை மூணுரோடு பகுதிக்கு மாற்ற வேண்டும் என, கிராமத் தலைவர் சுந்தரம் தலைமையில் மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வருக்கு கிராம மக்கள் புகார் மனு அனுப்பி இருந்தனர். இந்நிலையில், கட்டடம் தொடர்ந்து கட்டுப்பட்டு வருவதை கண்டித்து கிராம மக்கள் நேற்று கறுப்புக்கொடி ஏந்தி, கோஷம் எழுப்பி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் டி.எஸ்.பி., ரவி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உட்பட, சுகாதாரத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'இந்த சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சை மட்டும் அளிக்கப்படும். நோயாளிகளை தங்க வைப்பதில்லை' என, உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை