இரவில் விதிகளை மீறி மண் அகற்றம்; பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
கூடலுார்: கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தனியார் இடத்தில், இரவில் மண் அகற்ற பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டத்தில், வளர்ச்சி பணிகளுக்காக மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவசியம். அனுமதி இன்றி மண் எடுக்கப்பட்டால் அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் சிலர், இது போன்ற அனுமதி எதுவும் பெறாமல் இரவு நேரங்களில், மண் எடுத்து அகற்றுவதாகவும், இதற்கு ஒரு சில அதிகாரிகள் துணை போவதாவும் புகார் உள்ளது. தொடர்ந்து, கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் நேற்று முன்தினம், இரவு மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மார்த்தோமா நகர் பகுதியில், தனியார் இடத்தில் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மண் அகற்றுவது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், இரவு நேரத்தில் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'மண் எடுக்க அனுமதி உள்ளதா, எதனால், இரவு நேரத்தில் மண் எடுக்கப்பட்டது என்பது குறிக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.