| ADDED : ஜன 24, 2024 11:50 PM
குன்னுார் : குன்னுார் அருகே, எல்ல நள்ளி கல்லுாரி அருகே விபத்தில் பலியான கால்பந்து வீரரின் சிலையை வடித்து, அவரின் தாயிடம்நண்பர்கள் வழங்கிய நிகழ்வு, நட்பின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது.குன்னுார் எல்லநள்ளி அட்டுகொலை கிராமத்தை சேர்ந்த ரித்திக், கேத்தி சி.எஸ்.ஐ., கல்லுாரியில் படித்து வந்தார். இவர் கடந்த மே மாதம் கல்லுாரிஅருகே பைக் விபத்தில்பலியானார். இவரின் நினைவாக, அட்டு கொலை கிராமத்தில், ஏ.டி.கே., கால்பந்து குழு சார்பில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.போட்டிக்கு, ரித்திக் தாயார் ரெஜினா, சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் போது, மக்கள் முன்னிலையில், இருவருக்கும் நினைவு பரிசை வழங்கினர். அதனை பிரித்த பார்த்த போது, தனது மகன் ரித்திக் சிலை இருப்பதை கண்டு மனம் கலங்கிய தாய் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கலங்க செய்தது. ரித்திக்கின் தாய் மற்றும் சகோதரருக்கு அனைவரும் ஆறுதல் கூறினார்.கால்பந்து குழுவினருக்கு, ரித்திக் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வு நட்பின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது.