சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை: மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஊட்டி: ஊட்டி அருகே, இந்திரா நகர் மக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில், 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்காததால் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மழை சமயங்களில் சேறும், சகதியாக சாலை காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு இடையே நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகரட்டி பேரூராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே, கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழைக்கு சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று, ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டர் தலைமையில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தில் முறையிட வந்தனர். அங்கு வந்த பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சமாதானமடையாத கிராம மக்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கிராம மக்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். கிராம மக்கள் கூறுகையில்,'சாலை வசதி கேட்டு, அதிகரட்டி பேரூராட்சிக்கு, 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலை வசதி இல்லாததால் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம். விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தரகோரி கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம்,' என்றனர்.