கோத்தகிரி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த புலி
கோத்தகிரி: கோத்தகிரி அருகே மர்மமான முறையில் புலி இறந்து கிடந்தது தொடர்பாக, வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி வன கோட்டம், கீழ் கோத்தகிரி வனச்சரகம் கடசோலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் அழுகிய நிலையில் புலி இறந்து கிடத்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கோத்தகிரி ரேஞ்சர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்தனர். பின், புலியின் உடல் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில்,' தனியார் தேயிலை தோட்ட கிணற்றில் புலி இறந்து கிடந்தது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. உடல் உறுப்புகளின் ரசாயன ஆய்வு பின்பு, முழு விபரம் தெரிய வரும்,' என்றனர்.-----