| ADDED : நவ 28, 2025 04:34 AM
கூடலுார்: 'கூடலுார், குடோன் அருகே பகலில் காட்டு யானைகள் கோழிக்கோடு சாலையில் கடந்து செல்வதால், எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார் குடோன் -நாடுகாணி இடையே கோழிக்கோடு சாலையை ஒட்டி, ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையமும், மறுபுறம் சிறு வனப்பகுதியும் அதனை ஒட்டி பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டமும் அமைந்துள்ளன. இப்பகுதியில் முகாமிடும் காட்டு யானைகள் உணவு, குடிநீருக்காக இரவில், அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. தற்போது, இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல துவங்கி உள்ளன. யானைகள் வரும் போது, வந்த வனக்காப்பாளர் தம்பா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சாலையின் இரு புறமும் வாகனங்களை நிறுத்தி, யானைகள் கடந்து செல்ல உதவி புரிகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதி சாலையின் இரு புறமும் உள்ள வனத்தில் முகாமிடும், காட்டு யானைகள் உணவு, குடிநீருக்காக இரவு மற்றுமின்றி பகல் நேரங்களிலும் சாலையை கடந்து செல்கின்றன. இவ்வழியாக பயணிப்பவர்கள், சாலையை கடந்து செல்லும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும், பாதுகாப்புடன் இப்பகுதியை எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும்,' என்றனர்.