முதுமலை சாலையோரம் அன்னிய தாவரங்களை அகற்றும் பணி துவக்கம்; சாலையை கடக்கும் விலங்குகளை காக்க நடவடிக்கை
கூடலுார்; முதுமலையில், வனவிலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில், அன்னிய செடிகளை வேருடன் அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் தொடரும் பருவ மழையால் வனப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. சாலையோரங்களில், வனவிலங்குகள் அதிக அளவில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இவைகள் குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில், சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களால், வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவது தெரிவதில்லை. திடீரென சாலை கடக்கும் போது, வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது. இதனை தடுக்கவும், வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவதை, வாகன டிவைர்கள் துாரத்தில் இருந்து பார்த்து வானங்களை மெதுவாக இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொரப்பள்ளி முதல் தமிழக- கர்நாடக மாநில எல்லை யான கக்கனல்லா வரை, 15 கி.மீ., துாரம், தேசிய நெடுஞ்சாலையோரத்தின் இருபுறமும், 30 மீட்டர் நீளத்தில், முட்புதர்கள் அன்னிய செடிகளை, வேருடன் அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,' அன்னிய தாவரங்களை அகற்றுவதால், வன விலங்குகளுக்கான புற்கள், உணவு தாவரங்கள் அதிகளவில் வளரும். மேலும், 30 மீட்டர் நீளம் வரை, தெளிவாக தெரியும் என்பதால், வாகனத்தில் வருபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல மடியும். விலங்குகள் உயிரிழப்பு தவிர்க்கப்படும்,' என்றனர்.