மார்கழி மாத ராமர் பஜனை இளைஞர்கள் ஆர்வம்
கூடலுார், ; கூடலுார் கிராமங்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நடந்து வரும் ராமர் பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமர் பஜனை நடத்தி வருகின்றனர். கிராம கோவில்களில் இருந்து இளைஞர்கள், பக்தியுடன் மார்கழி, 1ம் தேதி துவங்கி நாள்தோறும் அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி (கம்பம் விளக்கு) அதனை ஒவ்வொரு வீடுகளுக்கு எடுத்துச் சென்று, பூஜை செய்து சூரிய உதயத்துக்கு முன் கோவிலை வந்தடைகின்றனர். பஜனை ஊர்வலத்தின் போது இளைஞர்கள் இசையுடன் ராமபிரான் குறித்த பக்தி பாடல்களை பாடி வருகின்றனர். அதிகாலையில் செல்ல முடியாத பகுதிகளுக்கு, மாலை சூரிய மறைவுக்கு பின் ராமர் விளக்கு எடுத்து சென்று பூஜை செய்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'கிராம பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மார்கழி, 1ம் தேதி முதல், அதிகாலை ராமர் பஜனை ஊர்வலம் நடத்துவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அதில், பங்கெடுக்க கூடிய இளைஞர்கள், பஜனை முடியும் காலம் வரை சைவ உணவு உட்கொள்வதுடன் கோவிலில் தங்கி ஊர்வலத்தில் பங்கேற்று வருகின்றனர்.தை 1ம் தேதிவரை இந்த பஜனை நடக்கும்,' என்றனர்.