காசோலை பவர் இல்லை தி.மு.க., --தலைவர் லகலக
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் ஊராட்சி தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த பிரபு. வி.களத்துார் ஊராட்சி, ராயப்பா நகரில் மார்ச் மாதம் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது, கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், 34, இறந்தார். கல்லாற்றில் கழிவுநீர் கலந்த தண்ணீரை ஊராட்சி நிர்வாகம்பொதுமக்களுக்கு வினியோகம் செய்ததாகவும், அதை அருந்தியதால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கல்லாற்றில் கழிவுநீர் கலந்ததை தடுக்கத்தவறிய அதிகாரிகள் மூவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.தொடர்ந்து, பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற தண்ணீரை வினியோகம் செய்து, நோய்த் தொற்று ஏற்பட காரணமாக இருந்ததாகவும், வரி வசூல் பணம் உட்பட வரவு, செலவினங்களில் முறைகேடு செய்ததாகவும் வி.களத்துார் ஊராட்சி தலைவர் பிரபுவுக்கு, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது.எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபு வழக்கு தொடர்ந்தார். கடந்த 12ம் தேதி காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்தது. நீதிமன்றம் உத்தரவிட்டு, 25 நாட்களாகியும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பிரபுவுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை.இதைக் கண்டித்து, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகம் முன், நாளை நிர்வாணப் போராட்டம் நடத்துவதாக பிரபு அறிவித்துள்ளார். இந்த தகவலை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.