கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
புதுக்கோட்டை:கோட்டைப்பட்டினம் கடற்கரையில், கடலில் மிதந்த, 20 கஞ்சா பண்டல்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடற்கரையில் கடலில் மிதந்து வந்த, 20 பண்டல்கள் குறித்து மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பண்டல்களை கைப்பற்றி சோதனை செய்ததில், 40 கிலோ கஞ்சா இருந்தது. இதுகுறித்து, திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து கஞ்சா பண்டல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர். அதேபோல, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுப்பகுதி மீனவ கிராமத்தினர், இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் கருப்பு நிற பிளாஸ்டிக் பை ஒன்று மிதந்து வந்தது. மீனவர்கள் அதை எடுத்து, படகில் வைத்து பிரித்து பார்த்த போது, 10 பைகளில், 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கரை திரும்பிய மீனவர்கள், கஞ்சா பொட்டலங்களை மரக்காணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.