புதுக்கோட்டையில் கடல் பாசி பூங்கா திட்டம்; நிதி ஒதுக்கியும் இடம் கிடைக்காததால் அம்போ
புதுக்கோட்டை; கந்தர்வக்கோட்டை அருகே மங்கனுாரில் கடல் பாசி பூங்கா அமைக்க, அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்தும், போதிய இடம் கிடைக்காததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கடலோர கிராமங்களில், மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக அரசு, மகளிர் குழு, தனிநபர் ஆகியோர் கடல் பாசி வளர்க்கும் திட்டத்தை, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றன.நாளுக்கு நாள் குறைந்து வரும் மீன் வளம், ஆண்டுதோறும் உயரும் மீனவர்களின் எண்ணிக்கையை கருதி, அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், கடல் சார்ந்த கூண்டுகளில் மீன் வளர்ப்பு, சங்குகள், கடல் சார்ந்த பொருட்களை சேகரித்தல், கடல் நீரில் பாசி வளர்த்தல் போன்ற தொழில்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.இதில், கடல் பாசி வளர்ப்பு மகளிர் சுய உதவிக்குழுக்கள், தனிநபர்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே மங்கனுாரில் பிரதமர் மீன் வள மேம்பாட்டு திட்டத்தில், கடல்பாசி பூங்கா அமைக்க, 2022- - 2023ம் ஆண்டு, 127.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மங்கனுாரில் கடல் பாசி பூங்கா அமைப்பதற்கு, 193 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலம் கிடைக்காமல், மூன்று ஆண்டுகளாக, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு கடல்பாசி பூங்கா அமைத்தால், இப்பகுதியில் உற்பத்தி செய்யும் கடல் பாசியை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்ற முடியும். கடல் பாசி உற்பத்தி செய்யும் நபர்களுக்கு உரிய விலையும் கிடைக்கும். இது தொடர்பான பயிற்சி வழங்கவும், இங்கிருந்து கடல்பாசி தொடர்பான பொருட்களை வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்த பூங்கா உதவும்.மங்கனுாரில் கடல் பாசி பூங்காவை விரைவில் துவங்க மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பச்சை ரூ.20; காய வைத்தால் ரூ.70
கடற்கரையில் இருந்து 10 மீட்டரில் கடலில், ராப்டர்களில் 20 செ.மீ., இடைவெளி விட்டு, 100 கிராம் முதல், 200 கிராம் வரை கடல் விதை பாசியை நுாலால் கட்டி வைக்கப்படுகிறது. விதை, கடலுக்குள் சென்று விடாமல் இருக்க, விதை பாசி இடைவெளியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் கட்டி வைக்கப்படுகின்றன.கடல்பாசிகள் 45 முதல், 50 நாட்களில் வளர்ந்து பலன் கொடுக்கிறது. 200 முதல் 250 கிலோ வரை அறுவடை செய்யப்படுகிறது.இந்த கடல்பாசிகள், மருந்துகள், ஜெல்லி, சாக்லேட், உரங்கள் மற்றும் சாதன பொருட்கள் தயாரிக்கவும், உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றன.தனியார் நிறுவனங்கள் கடல் பச்சை பாசியை, கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு வாங்குகின்றனர். காய வைத்து வழங்கினால் கிலோவுக்கு 45 முதல் 70 ரூபாய் வரை வாங்குகின்றனர்.