ராமேஸ்வரம் மீனவர் 7 பேர் இலங்கையில் விடுதலை
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து, ஜூலை 23ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரு விசைப்படகுகளை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்து, அதில் இருந்த, ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க கோரி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று, மீனவர்கள் ஒன்பது பேரையும் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில், ஏழு மீனவர்களுக்கு தலா, 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அது ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.மற்ற இரு மீனவர்கள் ராபர்ட், அரிகிருஷ்ணன் படகின் டிரைவர்கள் என்பதால், தலா, 40 லட்சம் ரூபாய், அந்நாட்டு பணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அரிகிருஷ்ணன், 2வது முறையாக கைதாகியுள்ளதால், அவருக்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க, இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட ஏழு மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை துாதரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாட்களில் அவர்கள், விமானம் மூலம் சென்னை வரவுள்ளனர்.