| ADDED : மே 30, 2024 10:11 PM
தொண்டி, - தொண்டி கிழக்கு கடற்கரை ரோட்டில் இரவில் மாடுகள் திரிவது அதிகரித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துகள் அதிகரித்துள்ளது.தொண்டி கிழக்கு கடற்கரை ரோடு அதிகமான போக்குவரத்து மிகுந்த ரோடு. திருச்செந்துார், நாகூர், நாகபட்டினம், ராமேஸ்வரம், துாத்துகுடி, கன்னியாகுமரி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வதால் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன.கடற்கரை பகுதியாக இருப்பதால் கேரளா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த மீன் கம்பெனி லாரிகளால் 24 மணி நேரமும் அதிகமான போக்குவரத்தாக காணப்படும். இப்பகுதியில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் மாடுகள் சாலையை மறித்து படுத்துக்கொண்டும், நின்று கொண்டும் இருக்கின்றன. வாகனங்கள் வரும் போது திடீரென குறுக்கும், நெடுக்குமாக மிரண்டும் ஓடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இதுகுறித்து வட்டாணம் மக்கள் கூறுகையில், ஏற்கனவே இரு பக்கமும் சீமைகருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் தினமும் விபத்துகள் நடக்கிறது. இந்நிலையில் மாடுகளின் தொல்லையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தபட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.