| ADDED : ஜூலை 16, 2024 11:55 PM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி வள்ளல் சீதக்காதி ரோடு பிரதானமாக விளங்குகிறது. ரோட்டின் இரு புறங்களிலும் ஏராளமான வணிக வளாகங்கள், கட்டடங்கள், கடைகள் உள்ளன.ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வாடிக்கையாக நடந்து வந்தாலும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்படும் செயல் அரங்கேறி வருவது தொடர்கிறது. இதனால் கீழக்கரை நகருக்குள் வரும் அரசு பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் செல்வதில் நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை, போலீசாருக்கு அடிக்கடி புகார் மனுக்கள் சென்றன. இதனடிப்படையில் நேற்று காலை கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், தலைமை நில அளவீட்டாளர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை மார்க்கிங் செய்தனர். அதனடிப்படையில் இயந்திரத்தின் மூலமாக படிக்கட்டுகள் விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணி நடந்தது. பொதுமக்கள் கூறியதாவது:ரோட்டோர ஆக்கிரமிப்பு தொடர்கிறது. எனவே உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக உள்ள கீழக்கரை -ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டில் இரு புறங்களிலும் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.