| ADDED : ஜூலை 03, 2024 02:13 AM
கடலாடி:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பஸ் ஸ்டாண்ட் அருகே ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு செய்த ராணுவ வீரர் உள்ளிட்ட நான்கு பேர் ரோந்து வந்த இரு போலீசாரையும் தாக்கி சீருடையையும் கிழித்தனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராணுவ வீரர் உள்ளிட்ட மூவர் தப்பினர்.கடலாடி பஸ் ஸ்டாண்ட் அருகே கடலாடியைச் சேர்ந்த மகாலிங்கம் 30, ஓட்டல் நடத்துகிறார். ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் திருக்குமரன் 32, நண்பர்கள் மகாலிங்கம் 30, முரளிதரன் 31, பாலா 30, ஆகியோர் சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்டனர். சாப்பிட்டதற்கான பணத்தை மகாலிங்கம் கேட்ட போது கடனாக எழுதி வைக்குமாறு கூறி தகராறு செய்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற கடலாடி ஸ்டேஷனைச் சேர்ந்த போலீசார் புலித்தேவன், சிவ முனியசாமி ஆகியோர் அவர்களிடம் தட்டி கேட்டனர். போலீசாரிடம் நான்கு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். அவர்களின் சீருடைகள் கிழிந்து காயங்கள் ஏற்பட்டன.போலீசாரின் புகாரில்பேரில் மகாலிங்கத்தை கடலாடி போலீசார் கைது செய்தனர். தப்பிய ராணுவ வீரர் திருக்குமரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.