விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் ஹிந்து முன்னணி கோரிக்கை
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சிலைகள் தயராகிவருகின்றன. ஊர்வலம் அமைதியாக நடக்க மாவட்ட அதிகாரிகள், போலீசாரும் ஒத்துழைக்க வேண்டும், என ஹிந்து முன்னணி மாவட்டத்தலைவர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக 500 விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. காகித கூழ், மர கூழ், கப்பகிழங்கு மாவு, போன்றவைகளை கொண்டு இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படா வண்ணம் சிலை தயாரிக்கப்படுகிறது. இங்கு 3 அடி சிலைகள் முதல் 9 அடி வரை, ரூ.3000 முதல் ரூ. 15 ஆயிரம் செலவில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை விநாயகர் சதுர்த்தி தினத்தில் செப்., 7 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடக்கும். செப்.,8ல் ராமேஸ்வரம், பாம்பன், பரமக்குடி, தங்கச்சி மடம் பகுதியில் ஊர்வலம் நடக்கும். செப்.,9ல் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் நடக்கும். விநாயகர் ஊர்வலம் செல்லும் பகுதிகளில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ரோடுகளை சீரமைக்க வேண்டும். சிலைகள் கொண்டு செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடக்க அதிகாரிகள், போலீசாரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.