| ADDED : ஆக 21, 2024 08:46 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் அம்மன் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நடந்தன. விழாவின் தொடர்ச்சியாக சிலுகவயல் கிராமத்தார் மண்டகப்படி நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு திரவுபதி, தர்மர் திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகள் நடைபெற்று மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கிராம மக்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மகாபாரதம், திரவுபதி குறித்த வரலாற்று நிகழ்வுகள் போதிக்கப்பட்டன. திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து பக்தர்கள் திருமண மொய் எழுதி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் திருமண கோலத்தில் திரவுபதி, தர்மர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30ல் நடக்கிறது. தொடர்ந்து செப்.1ல் மஞ்சள் நீராடுதல் விழாவும், செப்.3ல் பட்டாபிஷேக விழாவும் நடைபெற்று விழா நிறைவடைகிறது.