உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  சாலையோரத்தில் நின்றவர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயம்

 சாலையோரத்தில் நின்றவர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயம்

திருவாடானை: சாலையோர கடையில் டீ குடித்தவர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த சேவியர், 40, ஜே.சி.பி., வாகன டிரைவர். நேற்று மதியம் 3:00 மணிக்கு தொண்டி - நம்புதாளை சாலையோரத்தில் டீ கடை அருகே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பாய்ந்து வந்த துப்பாக்கி தோட்டா அவரது வலது பக்க தோளில் பாய்ந்தது. மயக்கமடைந்தவரை, அங்கிருந்தோர் நம்புதாளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தோளில் பதிந்திருந்த தோட்டாவை டாக்டர்கள் அகற்றி, உயிரை காப்பாற்றினர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் பறவைகளை வேட்டையாடும் கும்பல் அதிகம் உள்ளது. துப்பாக்கிகளை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடுகின்றனர். சேவியர் நின்றிருந்த இடத்திலிருந்து சிறிது துாரத்தில் ஊருணி உள்ளது. அங்கு வலசை வரும் பறவைகளை, வேட்டையாடும் கும்பல் சுட்டபோது துப்பாக்கி தோட்டா சேவியர் மீது பாய்ந்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !