கீழக்கரையில் முன்பக்க டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற அரசு டவுன் பஸ்
கீழக்கரை: கீழக்கரையில் நேற்று காலை 11:30 மணிக்கு வள்ளல் சீதக்காதி சாலையில் நகருக்குள் சென்று விட்டு மீண்டும் ராமநாதபுரம் சென்ற 1பி டவுன் பஸ் முன்பக்க டயர் வெடித்து நடுரோட்டில் நின்றது. ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு புதிதாக 1பி விடியல் பயணம் என்ற பெயரில் அரசு டவுன் பஸ் புதிதாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு டவுன் பஸ் பார்ப்பதற்கு புதியதாக இருந்தாலும் அவற்றில் உள்ள டயர்கள் பழைய நிலையில் இருப்பதால் அடிக்கடி சேதமடைவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். பஸ்சில் பயணித்த பயணிகள் கூறியதாவது: விடியல் பயணம் பஸ்சில் பயணம் செய்தாலும் அதில் உள்ள டயர்கள் பழையதாகவே உள்ளன. எதிர்பாராத விதமாக நேற்று டயர் வெடித்ததால் இறங்கி மாற்று பஸ்சில் சென்று விட்டோம். பின்னர் பழுது நீக்கி வேறொரு டயர் மாட்டி பஸ்சை எடுத்துச் சென்றனர். எனவே கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழக பஸ்சில் பழைய டயர்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்து மாற்றாமல் தரமான டயரை மாற்றி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.