| ADDED : டிச 27, 2025 05:28 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பலருக்கு பயிர்க்கடன் வழங்கவில்லை. காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. அதற்குரிய நிவாரணம் தர வேண்டும். இந்த ஆண்டு முன்கூட்டியே நெல் கொள்முதலை துவங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ேஹமலதா , வேளாண் துறை இணை இயக்குநர்(பொ) பாஸ்கரமணியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுகி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: முத்துராமு, மாவட்டத்தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: நெல் சாகுபடியில் ஒரு மாதத்தில் அறுவடை பணிகள் துவங்க உள்ள நிலையில் பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வில்லை. விரைவில் தர வேண்டும். இவ்வாண்டு முன்கூட்டியே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். * இணைப்பதிவாளர் : கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு ரூ.247 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ரூ.432 கோடி வழங்க உள்ளோம். தகுதியுள்ள புதியவர்களுக்கு பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்படும். * கலெக்டர்: மழை வெள்ள நிவாரணம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க்கடன் வழங்க வேண்டும் என இணைப்பதிவாளரிடம் தெரிவித்தார். * மலைச்சாமி, மாவட்ட செயலாளர், காவிரி வைகை கிருதுமால் குண்டாறு: காட்டுபன்றிகள், மான்களால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள், வருவாய்த் துறை, வனத்துறையினர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்.* மாவட்ட வன அலுவலர்: காட்டுபன்றிகளால் பயிர்கள் சேதமடைந்தால் நிவாரணம் வழங்கப்படுகிறது. பாதிப்புள்ள இடங்களில் வனச்சரகர்கள் மூலம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விவசாயிகள் வட்டார வாரிய பேசியதாவது: கூட்டுறவு சங்களில் உரம் தர மறுக்கின்றனர். சில உரக்கடைகளில் யூரியா வாங்கும் போது காம்பளக்ஸ் வாங்க வற்புறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய கண்மாய் வாய்க்காலை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதனை அகற்ற வேண்டும். ஆர்.எஸ்.மங்கமலம் பெரிய கண்மாயை வாய்க்கால் களை துார்வார வேண்டும். தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும். கமுதி பகுதியில் வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் ரூ.20 கோடி பெற்றுத்தந்தமைக்கும், களரி கால்வாய் மறு சீரமைப்பிற்கு ரூ.14 கோடி வழங்கியதற்கும் நன்றி தெரிவித்து விவசாய சங்க நிர்வாகிகள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது வெள்ள நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின், இதற்காக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். கூட்டுறவு சங்கம் வாயிலாக புதிய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டும் தனியார் உரக்கடையில் விற்க வேண்டும். பிற பொருட்களை வாங்குவதற்கு கட்டாயப் படுத்தக்கூடாது. இது தொடர்பாக புகார்களை விவசாயிகள் தெரிவிக்கலாம். அறுவடை காலம் துவங்கும் முன்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.--