காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்
கமுதி: கமுதி அருகே தோப்படைப்பட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுஉள்ள சோளப் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கமுதி அருகே தோப்படைப்பட்டி, ஓ.கரிசல்குளம், நெறிஞ்சிப்பட்டி, புதுக்கோட்டை அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கம்பு, சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். தற்போது பருவமழை குறிப்பிட்ட அளவு பெய்யாததால் நெல் விவசாயம்பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கமுதி அருகே தோப்படைப்பட்டி, ஓ.கரிசல்குளம், நெறிஞ்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறுதானிய பயிர்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்துஉள்ளது.இந்நிலையில் தோப்படைப்பட்டி கிராமத்தில் நன்கு வளர்ந்துள்ள சோளப் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகளால் பயிர்கள் அழிக்கப்படுவது தொடர்கிறது. இதனால் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு சில விவசாயிகள் சிறுதானிய விவசாயத்தை கைவிட்டுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி உரிய இழப்பீடு வழங்கவும், வரும் காலத்தில் காட்டுப் பன்றிகள் பாதிப்பில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.