மழை வெயிலில் சிரமம் *மகப்பேறு பிரிவில் நோயாளிகள் உடன் இருப்போர்.. *மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவலம்
பரமக்குடி : பரமக்குடி அரசு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நோயாளிகளின் உடன் இருக்கும் உறவினர்கள், பராமரிப்பாளர்கள் தங்குவதற்கு இடமின்றி மழை, வெயிலில் சிரமம் அடைகின்றனர்.பரமக்குடி காட்டு பரமக்குடி பகுதியில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தாலுகா மருத்துவமனையாக இருந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ள நிலையில் நர்சுகளும் இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. ஆனால் மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.தொடர்ந்து மாதா மாதம் மகப்பேறு பிரிவில் நுாறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களின் பெற்றோர், உறவினர்கள், பராமரிப்பாளர்கள், பணியாளர்கள் தங்குவதற்கு இட வசதியின்றி இருக்கிறது. இதனால் மகப்பேறு பிரிவுக்கு வெளியில் இருக்கும் சிறிய அளவிலான ஷெட்டில் அமர்ந்துள்ளனர். இரவு நேரங்களில் துாங்க முடியாமல் கொசுத் தொல்லையால் தொற்று நோய் பீதியில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை இருக்கிறது. ஆகவே பராமரிப்பாளர்கள் தங்க இட வசதி செய்ய மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.---