சிங்கனேந்தல் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தல் ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தல் ஆறு அமைந்துள்ளது. மழைக்காலங்களில் நயினார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து வெளிவரும் உபரி நீர், இந்த ஆற்றின் வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த ஆற்றின் வழியாக உபரி நீர் வெளியேறி வீணாக கடலில் கலந்தது. மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு முறையான திட்டமிடல் மற்றும் தடுப்பணைகள் இல்லாததால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சிங்கனேந்தல் ஆற்றுப் பகுதியில் மழைக்காலங்களில் வீணாகும் உபரி நீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் சாத்தியக் கூறுகள் உள்ள பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.