கடலில் தத்தளித்த மீனவர் 8 மணி நேரத்திற்கு பின் மீட்பு
திருவாடானை; தொண்டி பகுதியை சேர்ந்த மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் தங்கியிருந்து மீன் பிடிக்கின்றனர். தொண்டி அருகே காரங்காட்டை சேர்ந்தவர் அருளானந்து 60. இவர் கோட்டைபட்டினம் மீனவர்களுடன் ஒரு படகில் நேற்று முன் தினம் இரவு மீன்பிடிக்க சென்றார். அப்போது தவறி விழுந்தார். மற்ற மீனவர்கள் தேடியும் கிடைக்காததால் கரைக்கு திரும்பினர். நேற்று தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த நாகூர்கனி மற்றும் சில மீனவர்கள் அந்தப்பக்கமாக மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருளானந்து கடலில் தத்தளித்து கொண்டிருப்பது தெரிந்தது. மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 8 மணி நேரம் கடலில் தத்தளித்த அவரை மீட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.